தமிழ் பேசும் மக்கள் தமிழர் (Tamils,Tamilians) ஆவர். தமிழர்கள் ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தெற்காசியதிராவிட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள்தென்னிந்தியா, இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும், தமிழீழமேஆகும். 1800 களில் பிரித்தானிய குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் மலேசியா,சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறேமொரிசியசு, மடகாசுகர், தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். 20 ம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று நடு ஆசிய நாடுகளுக்குச் சென்று வசிக்கின்றனர். 1950 களின் பின்னர் தமிழர் தொழில் வல்லுனர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். 1983 இலங்கை இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்டு பெருமளவு ஈழத்தமிழர்கள் அசுத்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, யேர்மனி,சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள். உலகில் சுமார் 77 மில்லியன் தமிழர்கள் வாழ்ந்து வருவதாகக் கணக்கிடப் பட்டுள்ளது.[1]
[தொகு]தமிழர் அடையாளம்
முதன்மைக் கட்டுரை: தமிழர் அடையாளம்
தமிழர் அடையாளம் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர் என்பதுவே தமிழர் அடையாளத்தின் அடிப்படை வரையறை. தமிழ் மொழியை அறிந்திரா விட்டாலும் தமிழர் பண்பாடு, பின்புலத்தில் இருந்து வந்து தம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்துவோரும் தமிழர் ஆவர். தமிழர் தாயக நிலப்பரப்புகளான தமிழ்நாடு, தமிழீழம் ஆகியவற்றில் வசித்து, தமிழ் மொழி பேசி தம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்தினால் அவர்களும் தமிழர் ஆவர்.
வேறு பல இனக் குழுக்களைப் போலன்றித் தமிழர் ஒருபோதும் ஒரே அரசியல் அலகின் கீழ் வாழ்ந்தது இல்லை.தமிழகம் எப்பொழுதுமே ஒன்றுக்கு மேற்பட்ட பேரரசுகள், ஆளுகைகளின் கீழேயே இருந்து வந்துள்ளது. இருந்த போதிலும், தமிழ் அடையாளம் எப்பொழுதும் வலுவாகவே இருந்து வருகிறது. தமிழர்கள் இன அடிப்படையிலும்,மொழி, பண்பாட்டு அடிப்படையிலும் ஏனைய தென்னாசியத் திராவிட இன மக்களுடன் தொடர்பு உடையவர்கள்.
முதன்மைக் கட்டுரை: தமிழர் வரலாறு, தமிழக வரலாறு
தமிழர் தோற்றம் பற்றி மூன்று கருதுகோள்கள் உள்ளன. பழந்தமிழர் தென் இந்தியாவின் பழங்குடிகள் என்பது ஒரு கருதுகோள். இரண்டாவது, சற்று வேறுபட்டு ஆதியில் ஆபிரிக்காவில் இருந்து அரேபிய கடல் ஊடாக தென்னிந்தியா வந்தோரின் வழித்தோன்றல்களே தமிழர் என்கிறது [2]. தமிழர் நடு ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படி இருப்பினும் தமிழினம் தொன்மை வாய்ந்த மக்கள் இனங்களில் ஒன்று.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில், குறிப்பாக ஆதிச்ச நல்லூரில், அகழ்ந்தெடுக்கப்பட்ட கிமு 1000-ஆம் ஆண்டு காலத்து புதையுண்ட மண்பாண்டங்கள் தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்கு சான்றாக விளங்குகின்றன. அப்புதை பொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கிமு 500 ஆண்டைச் சேர்ந்தவையாகும் [3].
[தொகு]புவியில் தமிழ் மக்களின் பரம்பல்
இதையும் பார்க்க: புவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை
[தொகு]இந்தியத் தமிழர்கள்
முதன்மைக் கட்டுரை இந்தியத் தமிழர்
பெரும்பாலான இந்தியத்தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே வாழ்கின்றனர். மேலும்இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். அவற்றில் பெரும்பாலான குடியேற்றங்கள் தற்காலத்தில் ஏற்பட்டவையாகும். எனினும் தென்கர்நாடகத்திலுள்ள மாண்டியா, ஹெப்பார் பகுதிகளிலும் கேரளத்திலுள்ளபாலக்காட்டிலும் மகாராட்டிரத்திலுள்ள புனே பகுதிகளிலும் தமிழர்கள் இடைக்காலத்திலிருந்தே வாழ்ந்து வருகின்றனர்.
[தொகு]இலங்கைத் தமிழ்பேசும் மக்கள்
முதன்மைக் கட்டுரை இலங்கைத் தமிழ்பேசும் மக்கள்
இலங்கையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் ஆவர். இவர்களை இலங்கைத் தமிழர், இலங்கைத் தமிழ் முசுலீம்கள், மலையகத் தமிழர் என மூன்று வகையினராக அடையாளப்படுத்தலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையைத் தமது தாயகமாகக் கொண்டோர் இலங்கைத் தமிழர் ஆவர். நீண்ட காலமாக இலங்கையில் வசித்து, தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு, இசுலாம் மதத்தைப் பின்வற்றுவோர் இலங்கைத் தமிழ் முசுலீம்கள் ஆவர். 1800 களில் பிரித்தானிய குடியேற்றவாத அரசால் இலங்கை மலைநாட்டுத் தேயிலை, இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கு என வருவிக்கப்பட்ட தொழிலாளர்களின் வழித்தோன்றல்கள் மலையகத் தமிழர் எனப்படுகிறார்கள். இலங்கையில் அனைத்துத் தமிழர்களினதும் மனித உரிமைகளை சிங்களப் பேரினவாத அரசு மறுத்து, அவர்க்ளை வன்முறைக்கு உட்படுத்தியது. இதை எதிர்த்தேஈழப்போராட்டம் வெடித்தது.
[தொகு]தென்கிழக்கு ஆசியாவில் தமிழர்
தென்கிழக்கு ஆசியாவுடன் தமிழர் அரசியல், வணிக, பண்பாட்டுத் தொடர்புகளைப் பேணியும், அங்கு பரவலாக வசித்தும் வருகின்றார்கள். குறிப்பாக, சோழப் பேரரசு சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது அதிகாரம் கொண்டிருந்ததால், பல தமிழர் இங்கு குடியமர்ந்து பின்னர் இனக்கலப்புக்கு உள்ளாகி இன்று அந்நாட்டு மக்களாகவே வாழ்கின்றார்கள். ஆங்கிலேயர் காலத்தில் தமிழர் இந்நாடுகள் சிலவற்றில் கூலிகளாக குடியமர்த்தப்பட்டனர். மலேசியா(கடாரம்), சிங்கப்பூர், பர்மா (அருமணதேயம்), தாய்லாந்து, இந்தோனேசியா (ஜாவா (சாவகம்), சுமத்ரா), கம்போடியாஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழர் வசிக்கின்றனர். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்றும் தங்கள் மொழி, பண்பாட்டைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான குழந்தைகள் தமிழ்ப் பள்ளிகளில் பயிலுவதே இதற்குச் சான்றாகும். அனைத்துக்கும் மேலாக தனது மக்கள் தொகையில் 10% குறைவான தமிழர்களைக் கொண்ட சிங்கப்பூர், தமிழைத் தேசிய மொழிகளில் ஒன்றாக அறிவித்துள்ளது.
[தொகு]ஆப்பிரிக்காவில் தமிழர்
முதன்மைக் கட்டுரை: ஆபிரிக்காவில் தமிழர்
ஆப்பிரிக்காவில் தமிழர் 19-ஆம் நூற்றாண்டின் நடுவில் இருந்தே வசித்து வருக்கின்றார்கள். குறிப்பாக 1850 களில் குடியேற்றவாத பிரித்தானிய அரசால் தமிழர்கள் தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, மடகாஸ்கர், ரீயூனியன் ஆகிய நாடுகளுக்கு வரவழைக்கப்பட்டனர். இங்கு தமிழர்களிடேயே தமிழ்மொழி பரவலாகப் பேசப்படாவிட்டாலும், தமிழர் பண்பாட்டுக் கூறுகளும் உணர்வும் உயிர்ப்புடன் இருக்கிறது. மொரிசியசு நாட்டு நாணயத்தில் தமிழ் எழுத்துகளும், எண்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டில் நைஜீரியா, கென்யா, சிம்பாப்வே போன்ற நாடுகளுக்குத் தமிழர்கள் ஆசிரியர்களாகவும், பிற தொழில் வல்லுனர்களாகவும் சென்றனர். பலர் தமது பணிக்காலம் முடிந்தவுடன் மீண்டும் தாயகத்துக்கோ வேறு நாடுகளுக்கோ சென்று விடுவர்.
[தொகு]ஐரோப்பாவில் தமிழர்
முதன்மைக் கட்டுரை: ஐரோப்பியத் தமிழர்
இந்தியா, இலங்கை சுதந்திரமடைந்து, 1950 களின் பின்னரே தமிழர்கள் தொழில் துறை வல்லுனர்களாக பிரித்தானியா முதற்கொண்டு பிற ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். 1983-இல் இலங்கையில் ஏற்பட்ட மோசமான இனக்கலவரங்களுக்குப் பின்னர் பெருந்தொகையினரான ஈழத்தமிழர்கள் அகதிகளாக ஐரோப்பாவுக்குஇடம்பெயர்ந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்து வாழ்வோரும் அவர்களின் வழித்தோன்றல்களும் ஐரோப்பியத் தமிழர் எனப்படுகிறார்கள். இன்று இவர்களில் கணிசமானோர் குடியுரிமை பெற்று, அந்தந்த நாடுகளின் மொழிகளைக் கற்று, பொருளாதார வளர்ச்சியடைந்து வாழ்கின்றனர். பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, இத்தாலி, சுவிற்சர்லாந்து, நோர்டிக் நாடுகள், பிற நாடுகளில் பரந்து வாழ்கின்றார்கள். மொத்தமாக ஏறக்குறைய 400 000 - 500,000 அளவுக்கு ஐரோப்பாவில் தமிழர்கள் வசிக்கின்றனர்.
[தொகு]ஓசியானியாவில் தமிழர்
முதன்மைக் கட்டுரை: ஓசியானியாவில் தமிழர்
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி ஆகிய ஓசானிய நாடுகளில் கணிசமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். பிஜி தீவுகளில் தமிழர்கள் குடியேற்றவாத பிரித்தானிய அரசால் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டவர்களின் வழித்தோன்றல்கள் ஆவர். இவர்களில் பலர் தமது அடையாளங்களை அங்கு அதிகமாக இருக்கும் இந்தி பேசும் மக்களுடன் கலந்துவிட்டார்கள். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பொருளாதார வாய்ப்புக்கள் தேடி இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழர்கள் சென்றார்கள்.
[தொகு]வட அமெரிக்காவில் தமிழர்
முதன்மைக் கட்டுரை: வட அமெரிக்காவில் தமிழர்
வட அமெரிக்காவில் கணிசமான தமிழர் வாழ்கின்றனர். 1950 களுக்கு பின்னர் வேலைவாய்ப்பு, பொருளாதார விருத்தி தேடி தமிழர் வட அமெரிக்காவுக்கு வரத் தொடங்கினர். 1983 இலங்கையில் வெடித்த கறுப்பு யூலைஇனக்கலவரங்களான் பாதிக்கப்பட்ட பெருந்தொகை ஈழத்தமிழர்கள் கனடா, ஐக்கிய அமெரிக்காவுக்கு வந்தனர். இன்று கனடாவில் 250,000 மேற்பட்ட தமிழர்களும், ஐக்கிய அமெரிக்காவில் 50,000 மேற்பட்ட தமிழர்களும் உள்ளார்கள்.
[தொகு]சமூக அமைப்பு
முதன்மைக் கட்டுரை: தமிழர் சமூக அமைப்பு
தமிழர் சமூக அமைப்பு சாதிய படிநிலை அடுக்கமைவையும், ஆண் ஆதிக்க மரபையும் கொண்டது. தமிழர் சமூக அமைப்பில் சமயத்தின் பங்கும் முக்கியம். தற்காலத்தில் சமூக எதிர்ப்புபோராட்டங்கள், சாதியத்துக்கு எதிரான அரசியல் சட்ட நிலைப்பாடுகள், நகரமயமாதல், பொருளாதார விருத்தி, நவீனமயமாதல் போன்ற பல காரணிகள் சாதிய கட்டமைப்பை தளர்த்தி உள்ளன. பெண்களுக்கான கல்வி, வேலை வாய்ப்புக்கள் பல மடங்கு பெருகி உள்ளன. அரசியல் சட்ட உரிமைகளும் கோட்பாட்டு நோக்கில் சமமாக உள்ளன. திராவிட இயக்கத்தின் இறைமறுப்பு கொள்கை, அறிவியல் வளர்ச்சி ஆகியவை சமயம் மீதான தீவர நம்பிக்கையை குறைத்துள்ளன.
[தொகு]மொழியும் இலக்கியமும்
முதன்மைக் கட்டுரைகள்: தமிழ், தமிழ் இலக்கியம்
மதுரை தமுக்கம் திடலின் வாயிலில் உள்ள "தமிழன்னை" சிற்பம்
தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான இலக்கண இலக்கிய வளம் மிக்க திராவிட மொழியான தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள். தமிழ், சமஸ்கிரதத்துக்கு இணையாக இந்திய நாட்டின் செம்மொழிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக 2005 ம் ஆண்டு தமிழே முதலாவதாக செம்மொழி என ஏற்கப்பட்டது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் அரச அலுவல் மொழியாகவும் இருக்கிறது.
[தொகு]சங்க இலக்கியம்
தமிழில் கிடைக்கப்பெற்ற தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். இது தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுப்பதோடு, அக்கால தமிழ்ச் சூழலையும் உரைக்கின்றது. கி.மு 300 தொடக்கம் கி.பி 300 வரை எழுதப்பட்ட இலக்கியம் சங்க இலக்கியம் எனப்படுகிறது. பழந்தமிழரின் அகப்பொருள் மற்றும் புறப்பொருள்பாடும் கவிதைகளும், அறிவியல் நிலைப்பாடுகளை நிறுவும் கவிதைகளையும் சங்க இலக்கியத்தில் காணலாம். சங்க இலக்கியத்தில் செடிகள், பறவைகள், விலங்குகள் பற்றிய குறிப்புகள் குறிப்பிடத்தக்கவை. இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்குஎன மூன்று தொகை நூற்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் எழுந்த அற நூல் திருக்குறள், இன்றும் அனைத்துத் தமிழர்களாலும் போற்றப்படும் ஒரு நூலாக விளங்குகிறது. திருவள்ளுவர் ஆண்டு முறை இவரின் பெயர் தாங்கிய தமிழர் ஆண்டு முறை.
[தொகு]சங்கம் மருவிய கால இலக்கியம்
கி.பி 300 இருந்து கி.பி 700 தமிழ் இலக்கிய வழக்கத்தில் சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. இக்காலத்திலேயேபெளத்த தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி ஆகியவையும், சமண தமிழ் காப்பியங்களான சீவக சிந்தாமணி, வளையாபதி, மற்றும் ஐஞ்சிறுகாப்பியங்களும் தோன்றின.
[தொகு]பக்தி கால இலக்கியம்
கி.பி 700 - கி.பி 1200 காலம் பக்தி இலக்கிய காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் தமிழ்ப் பக்தி இயக்கம் வலுப்பெற்றதது.சைவமும் வைணவமும் ஆதரவு பெற்றன. சைவ நாயன்மார்கள் பல ஆயிரம் தேவாரங்களைப் பாடினர். வைணவஆழ்வார்களால் நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பாடப்பெற்றன. இக்காலத்தில் திருமந்திரம் சிவஞானபோதம் உட்பட பதினான்கு சைவ சிந்தாத நூற்களும் இயற்றப்பட்டன. கலிங்கத்துப்பரணி, கம்ப இராமாயணம் ஆகியவையும் இக்காலத்தில் இயற்றப்பட்டன. 850ஆம் ஆண்டில் இருந்து 1250ஆம் ஆண்டு வரை சோழப் பேரரசு சிறப்புற்று இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
[தொகு]இடைக் கால இலக்கியம்
கி.பி 1200 - கி.பி 1800 காலப்பகுதி இடைக் காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் முகலாயர், நாயக்கர், மாராத்தியர், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் தமிழகப் பகுதிகளை ஆண்டனர். இக்காலமே தமிழ் இசுலாமிய இலக்கியம், தமிழ் கிறித்தவ இலக்கியம் ஆகியவற்றின் தோற்றக்காலம். முதல் தமிழ் அகரமுதலி, சதுரகராதி என்ற பெயரில், தமிழர்களால் வீரமாமுனிவர் என அறியப்படுகின்ற, இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரான வீரமாமுனிவர் என்று அறியப்படும் கிறித்தவ மத ஆசிரியரால் 1732 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பெரும்பாலான நிகண்டுகள்இயற்றப்பட்டதும் இக்காலத்திலேயே.
[தொகு]தற்கால இலக்கியம்
18 ம் நூற்றாண்டு தொடக்கம் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். இக்காலத்திலேயே தமிழர்களின் இலக்கிய மரபு தமிழர்களுக்கே புலப்படத் தொடங்கியது. உ. வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர்உட்பட பல தமிழறிஞர்கள் ஏட்டுத் தமிழ் இலக்கியங்களை தேடிப் பதிப்பித்து பாதுகாத்தனர். 1916 ம் ஆண்டில் தமிழில் மிகுதியாகக் காணப்பட்ட சமஸ்கிருத சொற்களையும் மணிப்பிரவாள நடையையும் தடுக்க தனித் தமிழ் இயக்கம்தொடங்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியோர் முன்னின்று தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினர்.
தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிக் கவிஞராக சுப்பிரமணிய பாரதியார் கருதப்படுகிறார். இக்காலத்தில் புதுக் கவிதை பிறந்தது. உரைநடை வீச்சு பெற்றது. புதினம், சிறுகதை, கட்டுரை ஆகிய எழுத்து வடிவங்கள் தமிழில் வளர்ச்சி பெற்றன. 1954-1968 காலப்பகுதிகளில் தமிழ்க் கலைக்களஞ்சியம் பல அறிஞர்களின் கூட்டுழைப்பாக உருவாக்கப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் மரபு, மார்க்சிய, முற்போக்கு, நற்போக்குப் போக்குகள் இனங்காணப்பட்டன. திராவிட இயக்கத்தினர் தமிழைக் கருவியாக பயன்படுத்தித் தமது கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச்செல்வதில் பெரும் வெற்றி கண்டனர். தற்கலாத்தில் பெண்ணிய கருத்துகளையும் எடுத்துரைத்த அம்பை, மாலதி மைத்ரி, குட்டி ரேவதி,சுகிர்தராணி, உமாமகேஸ்வரி, இளம்பிறை, சல்மா, வெண்ணிலா, ரிஷி, மாலதி (சதாரா), வைகைச்செல்வி, தாமரைஉட்பட தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளும் வலுப்பெற்று இருக்கின்றன. உலகத்தமிழர்களின் எழுத்துகளும் தமிழ் இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளன. நாளிதழ், இதழ், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என பல்வேறு ஊடகங்களிலும் தமிழ் வேரூன்றிப் பரவி நிற்கின்றது. அறிவியல் தமிழின் அவசியம் அறிந்து தமிழ்நாடு அரசும் பிற அமைப்புகளும் அதை வளர்ப்பதைக் குறியாகக் கொண்டு செயற்பட்டு வருகிறார்கள். அதே வேளை தமிழ்நாட்டில் பரவலாகப் புழங்கும் தமிங்கிலம் தமிழ் மொழிப் பேணலை சரவலுக்கு உட்படுத்தியிருக்கிறது.
[தொகு]பண்பாடு
முதன்மைக் கட்டுரை: தமிழர் பண்பாடு